3 தொகுதிகளில் விசிகவிற்கு வாக்களிக்க வேண்டாம் - திருமாவளவன் வேண்டுகோள்
புதுச்சேரியில் 3 தொகுதிகளில் விசிகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
புதுச்சேரி தேர்தல்
30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, வேட்புமனு தாக்கல் முடியும் வரை தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவி வந்த நிலையில், 4 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.

திமுக கூட்டணியில், உழவர் கரை எனும் ஒரு தொகுதி மட்டுமே விசிகவிற்கு ஒதுக்கப்பட்டது.
வேட்புமனுவை திரும்பப்பெறுவதற்கான நாட்கள் முடிவடைந்த நிலையில், திமுகவிற்கு ஒதுக்கப்பட்ட பல தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மனுவை திரும்ப பெற மறுத்தனர்.
3 தொகுதிகளில் விசிகவிற்கு வாக்களிக்க வேண்டாம்
தற்போது கூட்டணி கட்சிகளிடையே சுமுகமான சூழல் நிலவி வரும் நிலையில், திமுக ஒதுக்கிய உழவர் கரை தொகுதி தவிர மற்ற 3 தொகுதிகளில் விசிக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "வேட்புமனுதாக்கல் முடிவுற்ற பிறகே பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு காணப்பட்டது. அதன்படி எங்களுக்கு உழவர்கரை தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது. 16 இடங்களில் காங்கிரஸ் மற்றும் 13 இடங்களில் திமுகவும் போட்டியிடுவது உறுதியானது.

உழவர்கரையில் மட்டும் விசிக வேட்பாளர் போட்டியிடுவது, அவருக்கு ஆதரவாக திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பணியாற்றுவர்கள் என முடிவு செய்யப்பட்டது.
நாங்கள் வேட்புமனுதாக்கல் செய்திருந்த ஊசுடு, நெட்டப்பாக்கம், ஏனம் ஆகிய 3 தொகுதிகளில் வேட்புமனுக்களை திரும்பப் பெறாவிட்டாலும் கூட, நாங்கள் விசிக வேட்பாளருக்காக அந்த தொகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடபோதவில்லை.
எனவே, ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் ஏனம் தொகுதிகளில் விசிக சின்னத்திற்கு வாக்களிக்காமல் கூட்டணி கட்சிகளின் சின்னத்திற்கு வாக்களியுங்கள். உழவர்கரை தொகுதியில் மட்டும் விசிக சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்" என தெரிவித்துள்ளார்.