இவுங்களுக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கும் - அதிரடியாக அறிவித்த மு.க.ஸ்டாலின்
மகளிர் உரிமை பெற மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறுவோரும் விண்ணப்பிக்கலாம் என அதிரடியாக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமை தொகை
திமுக அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதியான மகளிர் உரிமை தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக, விண்ணப்பபடிவங்கள் நிரப்பும் பணிகளும் தற்போது முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் முன்னர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு இந்த திட்டத்தின் வாயிலாக பயன் பெற முடியாது என கூறப்பட்டு வந்தது.
முதல்வர் அறிவிப்பு
இதற்கிடையில் நேற்று, முதல்வர் முக ஸ்டாலின் முக்கிய அதிகாரிகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனயில், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்பது குடும்பத்தின் கடமையை தாண்டி சமூகத்தின் கடமை என்று அரசு கருதும் காரணத்தால், அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியத்தால், அந்தக் குடும்பத்தில் உள்ள தகுதியான பெண்கள் உரிமைத் தொகை திட்டத்தில் பலன் பெறுவது தடைபடக்கூடாது என தெரிவித்துள்ளார்.
எனவே, இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.