ஆளுநர் பாவம் எதையாவது சொல்லிக்கிட்டு இருப்பாரு - நக்கலாக பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன்
கனிம வளங்கள் கொள்ளை குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் உப்பில்லை
வேலுார் மாவட்டம் காட்பாடி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை உப்பு சப்பில்லாதது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
ஆளுநர் பாவம்
அண்மையில் ஆளுநர் தவறுகள் நடந்தால் கேட்பதற்கு அதிகாரம் இருப்பதாக கூறியிருந்தார் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஆளுநர் பாவம் எதையாவது சொல்லிக்கிட்டு இருப்பாரு என்று நக்கலாக பதில் அளித்தார்.
மேலும் தென்பென்னை ஆறு நீர் பகிர்வு குறித்து பேச செயலாளர் சென்றுள்ளார். அதனால் இந்த விவகாரம் குறித்து பின்னர் பேசலாம் என்று தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இயற்கை வளம் கொள்ளை போவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.