தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு
தென்பெண்ணை ஆற்றில் மாசு ஏற்படுவதைத் தடுக்க, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அரசுகள் இணைந்து பலனளிக்கும் தீர்வுகளைத் தயாரித்து தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கெலவரப்பள்ளி அணையில் நுரை பொங்கி மாசுபாடு ஏற்பட்டது மற்றும் பெங்களூரு நகர கழிவுகள் தென்பெண்ணை ஆற்றில் கலப்பதாக வெளியான செய்திகளையடுத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

விசாரணை
வழக்கை விசாரித்த அமர்வு, கடந்த 6 ஆண்டுகளாக பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என்றும், அண்மையில் எடுக்கப்பட்ட நீர் மாதிரிகள் கெலவரப்பள்ளி அணை நீர் தீவிரமாக மாசடைந்திருப்பதை உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்தது.
இதையடுத்து, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்டல இயக்குநர் மற்றும் தமிழ்நாடு, கர்நாடகா மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் உறுப்பினர் செயலர்கள் செப்டம்பர் 9-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.