கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த மாணவி - அதிரடி காட்டிய தமிழக அரசு
திருச்சியில் வரும் 29 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் பயனடைந்த ஒரு கோடியாவது நபருக்கு மருத்துவ பெட்டகத்தை முதலமைச்சர் நேரில் வழங்க உள்ளார்.
அமைச்சர்கள் நேரில் ஆய்வு
இதையெடுத்து முதலமைச்சர் பங்கேற்கும் விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் திருச்சி விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
மாணவி கண்ணீர் - அரசு அதிரடி
அப்போது பேசிய அவர், சீர்காழியைச் சேர்ந்த 13 வயது மாணவி அபிநயா தோல் அழுகல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அது குறித்து அபிநயா முதல்வருக்கு கோரிக்கை வைத்த வீடியோ வைரலானது. அது எங்கள் கவனத்திற்கு வந்த பின்பு அபிநயாவை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வாத நோய் பிரிவில் அனுமதித்துள்ளோம்.
சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவரை இன்று மதியம் நானே நேரில் சென்று சந்தித்து விசாரிக்க உள்ளேன். மாணவி அபிநயாவிற்கு உரிய சிகிச்சை வழங்கப்படும்.
பத்திரிக்கை, ஊடகங்கள், சமூக வலைதளங்களில் இதுபோன்று கோரிக்கைகள் வரும் பட்சத்தில் அவை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எய்ம்ஸ் நிலை எப்படி இருக்கு?
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 2019 ல் எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலையில் தான் தற்போதும் உள்ளது.
விரைவாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட வேண்டும் கோவையில் ஒரு எய்ம்ஸ் வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
2024 தேர்தலை மையப்படுத்தி ஒன்றிய அரசு மருத்துவமனையை கட்ட முயற்சித்தாலும் தேர்தலுக்காக செய்தாலும் அதை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்றார்.