கனவில் தோன்றிய பாம்பு... பரிகாரம் செய்ய பாம்பு முன் நாக்கை நீட்டிய விவசாயி - திடீரென கடித்ததால் பரபரப்பு
பரிகாரம் செய்வதாக கூறி பாம்பின் முன் 54 வயது நபர் நாக்கை நீட்டிய நிலையில் பாம்பு கடித்ததில் நாக்கு பரிபோனது.
கனவில் தோன்றிய பாம்பு
ஈரோட்டைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் ஒருவரின் கனவில் பாம்பு ஒன்று அடிக்கடி தோன்றியுள்ளது. இதை அவர் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கணவன் - மனைவி இருவரும் ஜோதிடர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டு உள்ளனர்.
அந்த ஜோதிடர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில் ஒன்றை கூறி அங்கு உள்ள சாமியார் பாம்புகளை வளர்த்து வருவதாகவும், அவரிடம் சென்று பரிகாரம் செய்தால் பாவங்கள் தீரும் என்றும் கனவில் பாம்பு வராது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதை நம்பிய அந்த விவசாயி கோவில் பூசாரியிடம் நடந்தவற்றை எடுத்துக் கூறியுள்ளார். அப்போது அந்த பூசாரி தன்னிடம் 20க்கும் மேற்பட்ட பாம்புகள் இருப்பதாகவும், தான் ஒரு கண்ணாடி விரியன் பாம்பை எடுத்து தருவதாகவும் அதன் முன் நாக்கை நீட்டி பரிகாரம் செய்ய கூறியுள்ளார்.
பாம்பின் முன் நாக்கை நீட்டியதால் பரிபோன நாக்கு
பூசாரியின் விசமாத்தனமான பேச்சை நம்பிய அந்த விவசாயி அவர் சொன்னதை போன்று பாம்பின் முன் நாக்கை நீட்டியுள்ளார். கொடிய விஷம் கொண்ட அந்த பாம்பு திடீரென விவசாயின் நாக்கில் கடித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி உடனே கத்தியை எடுத்து நாக்கை அறுத்துள்ளார். இதில் ரத்தம் அதிகளவில் வெளியேறவே அந்த விவசாயி சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார்.
இதனையடுத்து அவர் ஈரோடு மணியன் மெடிக்கல் சென்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கு மருத்துவர் செந்தில் குமரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர்.
கடுமையான போராட்டங்களுக்கு பிறகு அந்த விவசாயி தற்போது உயிர் பிழைத்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் வீடு திரும்பினார்.