கள்ளக்குறிச்சி கலவரம்; அப்பாவிகளை போலீசார் கைது செய்துள்ளனர் - கதறும் உறவினர்கள்
கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள் என அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி கலவரம்
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்திற்கு நீதி கேட்டு நேற்று நடந்த போராடட்டம் கலவரமாக மாறியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்கியதில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உள்பட 58 போலீசார் காயமடைந்தனர்.
கலவரத்தின் போது பள்ளியின் உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் சொத்துக்களை அடித்து நொறுக்கினர். இதில் பள்ளி முழுவதும் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது.
இந்த கலவரம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கலவரத்தில் தொடர்புடையதாக 320க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள்?
அவர்களில் 108 பேர் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அப்போது அங்கு வந்த அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க காத்திருந்தனர்.
செய்தியாளர்களை சந்தித்த உறவினர்கள் தங்கள் வீட்டு பிள்ளைகள் வேடிக்கை பார்க்க சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டது குறித்தும் எந்த தகவலையும் அவர்கள் பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை.
மேலும் கலவரக்காரர்களை போலீசார் கைது செய்யவில்லை என்றும்,அப்பாவி இளைஞர்களை கைது செய்துள்ளதாகவும் அவர்கள் கண்ணீர் தெரிவித்துள்ளனர்.