90 கன்டெய்னர்களுடன் சென்ற சரக்கு ரயில் மாயம் - அதிர்ந்து போன ரயில்வே நிர்வாகம்
90 கன்டெய்னர்களுடன் சரக்கு ரயில் காணாமல் போனதாக தகவல் ஒன்று தீயாக பரவிய நிலையில் அது குறித்து ரயில்வே நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.
தீயாக பரவிய தகவல்
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள மிஹான் என்ற இடத்தில் இருந்து கடந்த 1 தேதி பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களுடன் சரக்கு ரயில் ஒன்று புறப்பட்டது.
90 கன்டெய்னர்களுடன் புறப்பட்ட அந்த ரயில் நான்கைந்து நாட்களுக்குள் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகம் சென்று சேர்ந்திருக்க வேண்டும்.

புறப்பட்டு 13 நாட்கள் ஆகியும், ரயில் சேர வேண்டிய இடத்தை சென்றடையவில்லை எனவும் காணாமல் போனதாக தகவல் வெளியானது.
இணையதளம் ஒன்றில் இதுதொடர்பாக செய்தி வெளியிடப்பட்ட நிலையில், பலரும் ஆச்சரியமடைந்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
விளக்கம் கொடுத்த ரயில்வே நிர்வாகம்
அந்த செய்தியில், “பிப்ரவரி 1 ஆம் தேதி நாசிக் மற்றும் கல்யாண் இடையே ஊம்பர்மாலி ரயில் நிலையத்தில், கடைசியாக சரக்கு ரயில் வந்திருப்பது தெரியவந்தது. ஆனால், அதன்பிறகு ரயில் இருப்பிடம் குறித்த எந்த தகவலும் தெரியவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பீகாரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தண்டவாளம், ரயில் இஞ்சின் ஆகியவை திருடு போன நிலையில், மகாராஷ்டிராவில் ரயிலே காணாமல் போனதாக வெளியான தகவல் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரயில்வே நிர்வாகம், கன்டெய்னர் கார்ப்பரேசனும் ரயில் ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டதாக கூறியுள்ளது. உண்மைத் தன்மையை சரிபார்த்த பிறகு செய்தியை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.