அண்ணா மன்னிப்பு கேட்டதா நாங்க சொல்லல..பத்திரிகை விளக்கம் - சிக்கலில் அண்ணாமலை..!
அண்ணாதுரை முத்துராமலிங்க தேவரிடம் மதுரையில் மன்னிப்பு கோரியதாக தாங்கள் செய்தி வெளியிடவில்லை என தனியார் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
அண்ணாதுரை - அண்ணாமலை சர்ச்சை
சேகர் பாபாவிற்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 1956-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற விழாவில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பகுத்தறிவு கருத்துக்களை பேசிய அறிஞர் அண்ணாவை, மிக கடுமையாக சாடியிருந்தார் என்றும் தனது கருத்துக்கள் குறித்து மன்னிப்பு கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்கு பாலபிஷேகத்திற்கு பதிலாக ரத்த அபிஷேகம் நடைபெறும் என்று எச்சரித்ததாக கூறி, முத்துராமலிங்க தேவரின் இந்த எச்சரிக்கைக்கு பயந்து, அண்ணாவும் பி.டி ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர் என பேசினார்.
அண்ணாமலை இக்கருத்துக்களை கூறியதை தொடர்ந்து, திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதிமுகவின் ஜெயக்குமார், சிவி சண்முகம், செல்லூர் ராஜு போன்றோர் மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
நாங்கள் செய்தி வெளியிடவில்லை
இதன் தொடர்ச்சியாக பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் அதிரடியாக அதிமுக அறிவித்தது. இந்நிலையில், தான் தற்போது அண்ணாமலை மேற்கொள்ள காட்டிய செய்தி நிறுவனம் இது குறித்து விளக்கத்தை அளித்துள்ளது.
அண்ணா மன்னிப்பு கேட்டதாக தாங்கள் செய்தி வெளியிடவில்லை என சுட்டிக்காட்டி, ஜூன் 4, 1956-இல் முத்துராமலிங்க தேவர் அண்ணாதுரையின் கருத்தில் இருந்து வேறுபட்டார் என்று மட்டுமே தாங்கள் செய்தி வெளியிட்டதாக குறிப்பிட்டு, அண்ணாதுரை தனது கருத்திற்கு மன்னிப்பு கேட்டதாகவோ, மறுத்து பேசியதாகவோ எந்த கருத்துக்களும் வெளியிடப்பவில்லை என பதிவிட்டுள்ளது.