தேசிய கீதத்தையும் தமிழ்நாட்டையும் அவமதிக்கும் ஆளுநர் ? ஆளுநர் ரவியும் சர்ச்சைகளும்
காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி என மேவிய யாறு பலவோடத் திருமேனி செழித்த தமிழ்நாடு. தமிழ்நாடு இதுதான் தற்போதையஅரசியலில் பேசுபொருளான விவாதமும் கூட தமிழ்நாடும் ஆளுநர் ரவியும்தான் தற்போதைய அரசியலில் பேசு பொருளாகியுள்ளனர்.
ஆளுநர் ரவி சர்ச்சை
தமிழக சட்டப்பேரவையில் இந்தாண்டின் (2023) முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. அதில் ‘வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்.’ என தமிழில் தனது உரையை தொடங்கினார் ஆளுநர் ரவி. இந்திய அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் கீழ் தமிழகம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என குறிப்பிட்டார்
.இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையில் முக்கிய பகுதியினை வாசிக்காமல் தவிர்த்தார். ஆளுநர் உரையின் 47 ம் பக்கத்தில் உள்ள சமூக நீதி, சுயமரியாதை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி சமத்துவம் பெண்ணுரிமை மத நல்லிணக்கம் பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் தற்போதைய அரசின் அடித்தளமாக உள்ளது.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் , பெருந்தலைவர் காமராசர் , தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா , முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியினை இந்த அரசு வழங்கி வருவதாக அந்த உரையில் இருந்தது அதனை ஆளுநர் ரவி புறக்கணித்தார்.
ரிஷிகள் இந்தியா
இது இப்போது மட்டுமல்ல அவ்வப்போது நடக்கும் அரசு விழாக்களிலும் ஆள்நரின் சில செயல்கள் கடும் விமர்சனத்தை சந்தித்தது. ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் பாரதியார் உருவப்படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், சுதந்திரத்துக்காக மட்டும் இன்றி, ஒருங்கிணைந்த பாரதத்தை வலியுறுத்தியும் பாரதியார் பாடல்கள் எழுதியதாக தெரிவித்தார். இந்தியா ரிஷிகளாலும் முனிவர்களாலும் உருவானது என கூறிய ஆளுநர், ரிஷிகளும் முனிகளும் கவிஞர்கள் என்று தெரிவித்தார், இது கடும் விமர்சனத்தை சந்தித்தது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி,
தமிழ்நாடு வேண்டாம்
தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. பாரதத்தின் பகுதியே தமிழகம். தமிழகம் பாரதத்தின் அடையாளம், எனக் கூறினார். இதுதான் இங்கு கடும் விமர்சனத்திற்குள்ளானது .
இந்தியா முழுவதும் ஒரே திட்டம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது ஆளுநர் கருத்து மட்டுமல்ல மத்தியில் ஆண்ட ஆளும் கட்சிகளின் கொள்கையாக இருந்தது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இங்கு ஒரே மொழியினை வைத்து இங்கு ஆட்சி மொழியினை கொண்டு வர முடியாது இந்தியா போன்ற பெரும் தேசத்தில் பல்வேறு கலாச்சாரங்கள் , பல மொழிகள் , இருந்தாலும் இந்தியர் என்கின்ற உணர்வு எப்போதும் நம் மக்களின் மனதில் இருக்கும். அதனை குலைக்கும் விதமாக மத்தியில் ஆண்ட ஆளும் கட்சிகள் தொடர்ந்து செய்து வருகின்றன
. குறிப்பாக பாஜக தென் மாநிலங்களில் தங்களின் கோட்டையினை பிடிக்க எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் திறன் வாய்ந்த அவர்களின் கொள்கை பிடிப்புள்ளவர்களை ஆளுநர்களாக நியமித்து தங்களின்( இந்துத்துவ) கோட்பாடுகளை திணிப்பது போல் உள்ளது . அதற்கு உதாரணமாக அவரது செயல்பாடுகளும் அரசு விழாவில் அவரது பேச்சும் உள்ளது,
இந்தியா என்ற நாடு உருவாவதற்கு முன்னரே தமிழ் என்ற மொழி இருக்கிறது. அதையொட்டி தனி கலாசாரம் மற்றும் பண்பாடு உள்ளது அப்படியென்றால் அவர்களுக்கென தனித்தேசியம் இருப்பது இயல்பானதுதான். ரஷ்யாவில் சோவியத் யூனியன் இருந்த போது கூட அதில் இருந்த நாடுகளில் கஜகஸ்தான் போன்ற நாடுகள் இருந்தன. அதில் உள்ள தான் என்பதும் தமிழ்நாடு என்பதில் உள்ள நாடும் ஒரே பொருள்தான் கொள்ளும்.
பாரதி சொன்ன தமிழ்நாடு
அதே போல் இந்தியா என்ற பெயர் வரும் முன்பே இந்தியா என்ற பெயர் பழக்கத்திற்கு வருவதற்குப் பல நூறாண்டுகளுக்கு முன்னதாகவே தமிழ்நாடு என்ற பெயர் புழக்கத்திற்கு வந்துவிட்டது. ’இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின்’ என்றுதான் சேரன் செங்குட்டுவனை சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் புகழ்ந்துள்ளார். இதேபோல பரிபாடலிலும் தமிழ்நாடு என்ற சொல் உள்ளது உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் போல தமிழ்நாட்டின் பெயரும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்
. பிரதேசம் என்றால் தேசத்தின் துணைப்பகுதி என்ற பொருள் வரும் அதுதான் நமது தமிழ் நாடு என்ற பெயருக்கும் பொருந்தும். இவர்களுக்கு நாடு என்பதில் பிரச்னை இல்லை. தமிழ்நாடு என்பதில்தான் பிரச்னை. கொஞ்ச காலத்திற்கு முன் இவர்கள்தான் கொங்கு நாடு, கொங்கு தேசம் என்று ஆரம்பித்தார்கள். அது இவர்கள் சொல்லும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக இல்லையா? அதே சமயம் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்குப் பிறகு நீண்ட போராட்டமும், தியாகமும் இருக்கின்றது திராவிட கட்சிகளை கடந்தும் உள்ளது
.இந்த நிலையில் இந்த ஆண்டின் சட்டபேரவையின் முதல் கூட்டத்தில் அரசின் உரையில் பல பகுதிகளை தவிர்த்தற்கு, முதலமைச்சர் கண்டனத்தை அடுத்து பாதியில் வெளியேறியுள்ளார் ஆளுநர் . வழக்கமாக எதிர்கட்சிகள்தான் அவையினை விட்டு வெளிநடப்பு செய்வார்கள் ஆனால் ஆளுநரின் இந்த செயலும், எப்போதும் இந்திய நாட்டின் மீது பற்றுள்ளவராக கூறும் ஆளுநர் இன்றைய பேரவையில் தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பே வெளியேறியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் எதிர்ப்புக்கான காரணம் திராவிட மாடலா ? அல்லது தமிழ்நாடா? என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது,
தமிழக சுதந்திர போராட்ட வீரர்களில் எப்போதும் பாரதியை முன்னிறுத்தும் பாஜக,அந்த வகையில் பாரதியின் கவிதையில் இதோ சில வரிகள்
வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் – மணி
யாரம் படைத்த தமிழ்நாடு..
‘’ தமிழ், தமிழ்நாடு பாரதியின் பெரும் கனவு ‘’