சர்ச்சைக்குரிய இந்தக் கதாபாத்திரத்தில் ஏன் நடிக்க ஒப்புக்கொண்டேன்னு தெரியுமா? - நடிகை சமந்தா!
தி பேமிலி பேன் சீரீஸின் சர்ச்சைக்குரிய இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஏன் ஒப்புக்கொண்டேன் என நடிகை சமந்தா விளக்கமளித்துள்ளார்.
கடந்த ஜூன் 3-ம் தேதி இரவு இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தி பேமிலி மேன் வெப் சீரிஸின் இரண்டாம் பாகம் அமேசான் பிரைமில் வெளியானது.
சமந்தா இந்த இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளார். சமந்தாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அழகான நடிகையாக வலம் வந்த சமந்தா இந்த சீரிஸில் ஆக்ரோஷமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ட்ரைலர் வெளியான போது வெப் சீரிஸ் தமிழர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்ததாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து சமந்தா வெளியிட்டுள்ள பதிவில், “அனைத்து விமர்சனங்களையும் கருத்துகளையும் வாசிப்பது எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இந்த கதாபாத்திரத்தில் நடிக்க என்னை அணுகிய போது, ராஜியின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க அதை மிகவும் கவனமாக நுண்ணறிவுடன் கையாள வேண்டும் மற்றும் அதன் சமநிலை மாறாமல் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை நான் அறிந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
படக்குழுவினர் ஈழப் போரில் பாதிக்கப்பட்ட பெண்களின் கதைகளை உள்ளடக்கிய தமிழ் போராட்டத்தின் ஆவணப்படங்களை எனக்கு காண்பித்தனர்.
நான் அந்த ஆவணப்படங்களை பார்த்தபோது, ஈழத்தின் தமிழர்கள் பல காலங்களாக அனுபவித்த கஷ்டங்கள் மற்றும் சொல்ல முடியாத துயரங்களைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.
நான் பார்த்த அந்த ஆவணப்படங்கள் சில ஆயிரம் பார்வைகளை மட்டுமே பெற்றிருந்தன என்பதை நான் கவனித்தேன். அதுதான் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களை இழந்தபோது உலகம் எப்படி விலகி நின்று பார்த்தது என்பது எனக்குத் தெரியவந்தது.
மேலும், லட்சக்கணக்கானோர் தங்கள் வாழ்வாதாரத்தையும் வீடுகளையும் இழந்தனர். ஈழத் தமிழர்கள் பலர் இன்னும் தங்கள் நாட்டில் நடந்த போரின் காயங்களுடன் மற்ற நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
ராஜியின் கதை, கற்பனையானது என்றாலும், ஒரு நியாயமற்ற போரினால் இறந்தவர்களுக்கும், போரின் வேதனையானநினைவுகளுடன் தொடர்ந்து வாழ்பவர்களுக்கும் நான் செய்யும் ஒரு அஞ்சலியாக இதை கருதுகின்றேன் .
ராஜியின் சித்தரிப்பு சமநிலையாக, நுணுக்கமாக மற்றும் உணர்திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதில் நான் மிகவும் கவனமாக இருந்தேன்.
ராஜியின் கதை மக்களை கொடுமைப்படுத்துபவர்களுக்கு எதிராக மனிதர்களாக நாம் ஒன்றிணைய வேண்டும் என்பது குறித்து தெளிவான, மிகவும் அவசியமான நினைவூட்டலாக இருக்க விரும்புகிறேன்.
நாம் அவ்வாறு செய்யத் தவறினால், எண்ணற்றவர்களுக்கு அவர்களின் அடையாளம், சுதந்திரம் மற்றும் சுயநிர்ணய உரிமை மறுக்கப்படும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.