மது போதையில் விமானத்தை இயக்க வந்த விமானி - அதிர்ந்து போன ஊழியர்கள்..!
யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் குடிபோதையில் விமானத்தை இயக்க வந்ததற்காக கைது செய்யப்பட்டதை அடுத்து, பாரிஸிலிருந்து வாஷிங்டனுக்கு செல்லவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.
குடி போதையில் வந்த விமானி
63 வயதான அமெரிக்க விமானி கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பாரிஸில் உள்ள சார்லஸ் டி கோல் விமான நிலையத்திலிருந்து வர்ஜீனியாவில் உள்ள வாஷிங்டன் டல்லஸ் விமான நிலையத்திற்கு 267 பயணிகளுடன் பறக்கத் தயாராக இருந்தார்.
ஆனால், அவர் விமானத்தை இயக்க தயாராக வந்தபோது, வெளிப்படையாக குடிபோதையில் இருந்ததற்கான அறிகுறிகள் தெரிந்தன. மேலும் அவர் சற்று தள்ளாடியபடியும் வந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள், அவரை இரண்டு முறை ஆல்கஹால் சோதனைகளுக்கு உட்படுத்தினர்.
கைது செய்த போலீசார்
அதில் அவருக்கு 0.59mg/l மற்றும் 0.56mg/l ஆல்கஹால் இருந்தது தெரியவந்தது. இது பிரான்சில் விமானிகளுக்கு அனுமதிக்கப்பட்ட வரம்பை விட ஆறு மடங்கு அதிகமாகும். இதனால் அவர் விமானம் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
மேலும், கடைசி நிமிடத்தில் அந்த விமானமும் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணையின் போது, முதல்நாள் இரவு இரண்டு கிளாஸ் ஒயின் மட்டுமே குடித்ததாக விமானி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இருப்பினும் நீதிபதி, " உங்களின் பொறுப்பற்ற செயலால் விமான விபத்து ஏற்பட்டிருக்கலாம், நீங்கள் 267 பயணிகளை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளீர்கள்" என்று கூறி, அவரை ஆறு மாத இடைநீக்கம் செய்ததுடன், சிறைத்தண்டனை மற்றும் 5,000 டாலர் அபராதமும் விதித்தார்.