அமானுஷ்ய சக்திகளால் நிறைந்துள்ள ‘தி கான்ஜூரிங்' பட பேய்வீடு ரூ.11.65 கோடிக்கு விற்பனை!
உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்ட ‘தி கான்ஜூரிங்’ படத்தில் இடம்பெற்ற அமானுஷ்யங்கள் நிரைந்த பேய் வீடு தற்போது ரூ.11.65 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு வெளியாகி உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்ட படம் தான் ‘தி கான்ஜூரிங்' என்ற பேய்ப்படம். படத்தில் இடம்பெற்ற ஒரு வீட்டில் நடைபெறும் அமானுஷ்ய சம்பவங்களால் சிக்கித்தவிக்கும் குடும்பம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளே இந்த படத்தின் கதை.
அமெரிக்காவின் ரோட் தீவில் அமைந்துள்ள பண்ணை வீடு ஒன்றில் நடந்ததாக கூறப்படும் சம்பவங்களின் தழுவலே ‘தி கான்ஜூரிங்’ திரைப்படம்.
இந்நிலையில், 286 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட இந்த பண்ணை வீடு தான் தற்போது 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை ஆகியுள்ளது.
மொத்தம் 3,100 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த பண்ணை வீட்டில் 3 படுக்கையறைகள் உள்ளன. இந்த வீட்டில் 1971 மற்றும் 1980 ஆண்டுகளுக்கு இடையில் ஆண்ட்ரியா பெரோன் என்பவர் வசித்து வந்தார்.
அந்த பண்ணை வீடு பல அதிர்ச்சியளிக்கும் அமானுஷ்ய விஷயங்கள் நடந்திருப்பதாக கூறும் பெரோன்," ஒருமுறை வயதான எனது தாய், நாற்காலியில் இருந்து 20 அடி தூரம் தூக்கியெறியப்பட்டதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துப்போனேன். வயதாகிவிட்டதால் அவருக்கு அந்த சம்பவம் குறித்து ஞாபகம் இல்லை.” என தெரிவித்தார்.
மேலும், “இதை அறிந்த அமானுஷ்ய ஆர்வலர் ஒருவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவரையும் கண்ணுக்குத் தெரியாத ஒன்று தாக்கியது" என்று கூறி அதிர வைக்கிறார் பெரொன்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து அமானுஷ்ய புலனாய்வாளர்களான ஜென் மற்றும் கோரி ஹெய்ன்சன் ஆகியோர் இந்த வீட்டை 2019 -ல் 4,39,000 டாலர்களுக்கு வாங்கினர். அதைத் தொடர்ந்து 2021 செப்டம்பரில் இந்த வீட்டை விற்க இருப்பதாக அவர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில் தான் இந்த வீட்டை ரியல் எஸ்ட்டேட் அதிபரான ஜாக்குலின் நுனேஸ் இந்திய மதிப்பில் ரூ.11.65 கோடிக்கு வாங்கியுள்ளார்.