விளையாட்டிலும் பாரபட்சம்; இந்த ஓரவஞ்சனை நியாயமா? மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்
விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்வதாக மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்துக்கு மிகக் குறைந்த நிதியையே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.
தமிழகத்திற்கு ஓரவஞ்சனை
குறிப்பாக, பாஜக ஆளும் குஜராத்துக்கு ரூ.608 கோடியும், அதைவிட பெரிய மாநிலமான தமிழகத்துக்கு ரூ.33 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது எவ்வகையிலும் நியாயமற்றது.
அண்மையில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.
கொந்தளித்த மக்கள் நீதி மய்யம்
அதில், கேலோ இந்தியா விளையாட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம், பீஹார், டெல்லி, ஹரியானா, இமாச்சல், கேரளா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களைவிட தமிழகத்துக்கு குறைந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
குஜராத்துக்கு ரூ.608 கோடி;
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) August 10, 2022
தமிழ்நாட்டுக்கு ரூ.33 கோடி!
விளையாட்டிலும் பாரபட்சம்; இந்த ஓரவஞ்சனை நியாயமா?
மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்.
(10/08/2022)#MakkalNeedhiMaiam #kamalHaasan #MNMPressRelease #MNM4Federalism #MNM4sports #MNMTN #MNMKH pic.twitter.com/TgPA30O6SG
அதேபோல, பயிற்சியாளர்களும் டெல்லிக்கு 121 பேர், அசாமுக்கு 56 பேரை பணியில் அமர்த்திவிட்டு, தமிழகத்துக்கு 18 பேரை மட்டும் பணியில் அமர்த்தியுள்ளனர். தமிழக வீரர்கள் சர்வதேச அளவில் சாதிக்கின்றனர்.
அவர்களை ஊக்குவிப்பதை விடுத்து, மாநிலத்துக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவது நியாயமா? மத்திய அரசுக்கு அதிக வரி வசூலித்துத் தரவும், சர்வதேச ஒலிம்பியாட் போட்டி நடத்தவும் மட்டும் தமிழகம் வேண்டுமா? நிதி ஒதுக்குவதில் ஓரவஞ்சனைதானா? " என்று கேள்வி எழுப்பியுள்ளது.