வரவேற்கவில்லை! இந்திய அளவில் புயலை கிளப்பிய சம்பவம்
மேற்கு வங்கத்திற்கு வருகை தந்த குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு-வை வரவேற்க மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்கள் வருகை தராதது இந்திய அளவில் புயலை கிளப்பியுள்ளது.
மேற்கு வங்கத்தில் பழங்குடியின் மக்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியொன்று நேற்று நடத்தப்பட்டது, ஏற்கனவே திட்டமிடப்படிருந்த பிதாநகருக்கு பதிலாக கோஷாய்பூருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது.
இதில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த குடியரசுத்தலைவரை வரவேற்க முதலமைச்சர், மூத்த அமைச்சர்கள் என யாரும் வரவில்லை.

இதை நிகழ்ச்சியின் மேடையிலேயே சுட்டிக்காட்டிய ஜனாதிபதி திரௌபதி முர்மு, என்னை வரவேற்க மம்தா வரவில்லை, ஆளுநரும் மாற்றப்பட்டிருப்பதால் அவரும் வரவில்லை, பரவாயில்லை.
பிதாநகரில் நடைபெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும், பலர் வருகை தந்திருப்பார்கள்.
மாநில அரசு ஏன் அனுமதி வழங்கவில்லை என தெரியவில்லை, தற்போதைய இடம் மக்கள் எளிதில் அணுகமுடியாத அளவு உள்ளது.
ஒருவேளை, பழங்குடியின மக்களுக்கான நலத்திட்டங்கள் வேண்டாமென மாநில அரசு நினைக்கிறதா? அதனால்தான் அந்த மக்கள் இங்கு வரக்கூடாதென தடுக்கப்பட்டார்களோ? மம்தா எனது இளைய சகோதரி போன்றவர், நானும் வங்கத்தின் புதல்வி தான் என பேசினார்.
இது வெட்கக்கேடானது மற்றும் முன்னெப்போதும் இல்லாதது என பிரதமர் கடுமையாக சாடினார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மம்தா பானர்ஜி, குடியரசுத் தலைவரின் செயலகம் அனுமதித்த திட்டத்தின்படியே வரவேற்பு நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டன; இதில் எந்த விதிமுறை மீறலும் இல்லை.
பழங்குடியினரைப் பற்றி பேசும் அதேவேளையில், மணிப்பூரிலும் பாஜக ஆளும் பிற மாநிலங்களிலும் பழங்குடியின மக்கள் துன்புறுத்தப்பட்டு இன்னல்களுக்கு ஆளானபோது ஏன் அமைதியாக இருந்தீர்கள்?
குடியரசுத் தலைவர் மீது மிகுந்த மரியாதை, மதிப்பு உள்ளது, ஆனால் பாஜக கொள்கைகளால் வழிநடத்தப்படுகிறீர்கள், மிகுந்த வருத்தத்துடனே இதை சொல்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜக தனது அரசியல் லாபத்திற்காக குடியரசுத் தலைவரை பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
