சாக்கடையில் பிறந்த குழந்தையை வீசி சென்ற பெண் - பதற வைக்கும் வீடியோ
தஞ்சாவூர் அருகெ சாக்கடையில் பிறந்த குழந்தையை வீசி சென்ற பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் அருகே உள்ள மேல அலங்கம் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் நேற்று காலை சாக்கடையை தூய்மை செய்து கொண்டிருந்தனர். அப்போது பிறந்து சிலமணி நேரமே ஆன ஆண் குழந்தை தொப்புள் கொடியுடன் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மேற்கு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அங்கு வந்த தஞ்சை மேற்கு காவல் நிலைய போலீசார் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் ஒரு பெண்மணி அக்குழந்தையை கொண்டு வந்து சாக்கடையில் வீசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
மேலும் குழந்தையை சாக்கடையில் போட்டுவிட்டு கட்டையால் வைத்து அப்பெண்மணி அமுக்குவதைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.