தஞ்சாவூர் தேர் திருவிழா - எடப்பாடி பழனிசாமி,அண்ணாமலை இரங்கல்..!
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் குருபூஜை விழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தேர் திருவிழா நடைபெற்றது.
இந்த தேர் திருவிழாவில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேர் உயர் மின்அழுத்த கம்பியில் உரசி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.16 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
'தஞ்சாவூர், களிமேடு அப்பர் கோவில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன், சிகிச்சை பெற்று வருவோர் பூரண நலம் பெற்று விரைவில், வீடு திரும்ப வேண்டுகிறேன்.
மரணமடைந்தோர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடும், காயமடைந்தோர்க்கு தக்க நிவாரணமும் வழங்கி தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'தஞ்சை களிமேடு தேர் பவனி விபத்து செய்தியை கேள்விபட்டு மிகவும் துயரத்தில் உள்ளேன்.
3 சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர் என்பதை மனம் ஏற்க மறுக்கின்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன்.
இனி இது போன்ற தேர் விபத்துக்கள் மூலம் உயிரிழப்புகள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு உயர்மட்ட குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்!' என்று தெரிவித்துள்ளார்.