தஞ்சை தேர் விபத்து - சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு..!
தஞ்சை தேர் விபத்து குறித்து தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
திருவிழா காலங்களில் போதிய பாதுகாப்பு இல்லை என கூறி சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது.
அதன் ஒரு பகுதியாக இன்று காலை தேர் திருவிழா நடைபெற்றது.அப்போது தேர் தஞ்சை - பூதலுார் சாலையில் தேர் திரும்பும் போது மேலே சென்ற உயர் மின்சார கம்பியின் மீது உரசியதால் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் பற்றி அறிந்தவுடன் தான் ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் தேர் திருவிழா என்றால் தேரோடும் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும். ஆனால் இந்நிகழ்ச்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம்சாட்டினார்.
மாவட்ட நிர்வாகம் சரியாக திட்டமிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் இந்த துயரச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளதாக கூறினார்.
அதிமுக சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாக தெரிவித்தார்.