நீட் தேர்வு புரட்சி செய்து வருகிறது - தமிழிசை சௌந்தரராஜன்
நீட் தேர்வு மிக பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருவதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நீட் விவகாரம்
நீட் தேர்வில் போதுமான அளவில் மதிப்பெண் எடுக்காத காரணத்தால் மகனை தொடர்ந்து தந்தையும் தற்கொலை செய்து கொண்டதால், நீட் விவகார பேச்சுக்கள் தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்றும் மாணவர் மற்றும் அவரின் தந்தையின் தற்கொலைக்கு பாஜக அரசு தான் காரணம் என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழிசை கருத்து
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசையிடம் இது குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த தமிழிசை, நீட் தேர்வை முதலில் இருந்தே தான் ஆதரித்ததாக குறிப்பிட்டு, புதுச்சேரியில் சாதாரண மாணவர்கள் பலர் தன்னை வந்து சந்தித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன் என்று சொன்னார்கள் என தெரிவித்தார்.
ஆனால், நீட் தேர்வை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்பது தனக்கு மிகுந்த கவலையாக இருக்கிறது என கூறி, நீட் தேர்வை விலக்க முடியாது என்று தெரிந்தே பொய் வாக்குறுதியைத்தானே திமுக கொடுத்தார்கள் என குற்றம்சாட்டினார். நீட் தேர்வில் விளக்கு அளிக்க முடியாது என்பது உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என கூறினார்.
ஆகவே நீட் தேர்வை வைத்து எல்லோரும் விளையாட வேண்டாம். மாணவர்களை படிக்க விடுங்கள். எப்போதும் நீட் தேர்வில் எதிர்மறை கருத்துகளை மட்டும் பரப்பாதீர்கள் என அவர் கேட்டுக்கொண்டார். பலர் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவர்களாக வரும் நிலையில், நீட் தேர்வு மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது என தெரிவித்தார். எப்போதும் ஒரு திட்டத்தை ஆரம்பிக்கும்போது சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் என்றார்.