தாமிரபரணி ஆற்றில் மிதந்து வந்த அம்மன் சிலை
தூத்துக்குடியில் தாமிரபரணி ஆற்றில் கிடந்த மாரியம்மன் வெண்கலச்சிலை மீட்கப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கைலாசநாதர் ஆலயம் முன்பு தாமிரபரணி ஆற்றில் மாரியம்மன் சிலை கிடப்பதாக முறப்பாடு போலீசுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சுமார் 2 அடி உயரம் கொண்ட மாரியம்மன் சிலையில் வலது கையில் உடுக்கையும், அதே கையில் வாளும் இருப்பதை போன்றும், இடது கை உடைக்கப்பட்ட நிலையிலும் காணப்பட்டது.
விரைந்து வந்த அதிகாரிகள் அம்மன் சிலையை மீட்டனர், இந்நிலையில் இன்று சிலை கிடைத்த கைலாசநாதர் கோவில் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் முறப்பநாடு போலீஸ் நிலையத்தில் உள்ள அந்தச் சிலையை அவர் பார்வையிட்டார்.
இந்த சிலை குறித்து முறப்பநாடு இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிவு செய்துள்ளார். அம்மன் சிலையை முறைப்படி தாசில்தாரிடம் ஒப்படைக்கவும், ஒப்படைத்த அந்த பொருளை நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது.