தலைகீழாக தொங்கவிட்டு சிறுநீர் கழித்த அவலம்...தலித் இளைஞருக்கு நடந்த கொடூரம்
ஆடு, புறா போன்றவற்றை திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில், தலித் இளைஞர் ஒருவரை தலைகீழாக கட்டி வைத்து அவர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சந்தேகத்தின் பேரில் கொடூரம்
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஆடு மற்றும் சில புறாக்களைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் நான்கு தலித் இளைஞர்களை பிடித்து, மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு அவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த மோசமான செயலை கண்டித்து அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் கடையடைப்புகளும் நடைபெற்றுள்ளது.
கொடுமையாக நடத்தினார்கள்
இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஷுபம் மகதே அளித்த பேட்டியில் தங்களுக்கு நடைபெற்ற கொடுமைகள் பற்றி கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசும் போது, சந்தேகத்தின் பேரில் தன்னை பிடித்த அவர்கள் தன் கால்களில் கயிறை வைத்து கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டனர் என தெரிவித்தார்.
தன்னுடன் இருந்த மூன்று சிறுவர்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர் என குறிப்பிட்ட அவர், தாங்கள் அவர்களின் அண்டை வீட்டார்கள் என்றும் அவர்களை விட தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்கள என்றும் தெரிவித்தார். கோபத்தில் இருந்து அவர்கள் தங்கள் மீது சிறுநீர் கழித்தார்கள் என வேதனையுடன் தெரிவித்த ஷுபம் மகதே, எச்சில் துப்பிய காலணிகளை நக்கும்படி தங்களிடம் வற்புறுத்தியதாக அவர் கூறினார். இந்த மோசமான சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.