தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: திமுக முன்னாள் அமைச்சரின் பதிவு

TVK
By Fathima Jun 24, 2026 04:03 AM GMT
Report

ஜூன் 22ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அண்ணா பிறந்தநாளன்று தமிழக முதலமைச்சர் விஜய் தொடங்கி வைப்பார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் செய்திக்குறிப்பு

இதுதொடர்பான செய்திக்குறிப்பில், தமிழக முதல்வரின் தலைமையில், வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களுக்கு (Vetri Thamizhagam vision document) தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் மிகவும் முக்கியமான திட்டம் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’.

அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும், பிரசவித்த தாயையும் கவுரவிக்கும் முகமாக ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ வடிவமைக்கப்பட்டு இன்று, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: திமுக முன்னாள் அமைச்சரின் பதிவு | Thaimaman Gold Ring Scheme Chief Minister Vijay

தமிழக அரசு தாய் - சேய் நலனை மேம்படுத்துவதற்கு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, இலவச பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு சேவைகள், அவசர மகப்பேறு சிகிச்சை, ஊட்டச்சத்து அளித்தல், பிரசவத்துக்காக மருத்துவமனையை திட்டமிடும் முறை மற்றும் கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டு கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மென்பொருள் (PICME) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு இம்முயற்சிகள் மாநிலத்தில் தாய் - சேய் நலக் குறியீடுகளை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தியுள்ளன.

யாருக்கெல்லாம் கிடைக்கும்?

அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு தமிழக முதலமைச்சரின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

தமிழர் பாரம்பரியத்தில், ‘தாய்மாமன் சீர்’ என்ற மரபின்படி, தமிழக முதல்வர், தாயின் சகோதரர் புதிதாகப் பிறந்த குழந்தையை வரவேற்று வாழ்த்தும் வகையில் தங்கம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கும் விதமாகவும், தமிழர் பண்பாட்டு மரபை பிரதிபலிக்கும் வகையிலும், அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் பங்கை ஏற்று, அன்பும் அக்கறையும் நிறைந்த வரவேற்பின் அடையாளமாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.


தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்

தமிழக அரசின் சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையின் பிறப்பை நினைவுகூரும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையிலும் ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்கிறது. இத்திட்டதுக்கான ஒப்பந்த புள்ளிகள் உடனடியாக கோருவதற்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தின் கீழ், 22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன்பெறுவார்கள். ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’, அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15, 2026 அன்று முதல்வர் விஜய் துவக்கி வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: திமுக முன்னாள் அமைச்சரின் பதிவு | Thaimaman Gold Ring Scheme Chief Minister Vijay

முன்னாள் அமைச்சர் கருத்து

முன்னாள் அமைச்சரான டிஆர்பி ராஜா எக்ஸ் தள பக்கத்தில், தங்க மோதிரம் திமுக அரசின் சீரிய நிதி மேலாண்மை செயல்பாட்டினால் இன்று சாத்தியம். கஜானா காலியாக இல்லை என்பதை இன்றைய ரீல்ஸ் அரசு ஒத்துக்கொள்ளுமா?

திட்டங்களுக்கு நிதி ஒதுக்க ஒதுக்க தமிழ்நாட்டின் நிதி நிலையை மீட்டெடுக்க அயராமல் உழைத்து நிதி நிலைமையை சீர் செய்த திராவிட நாயகன் முக ஸ்டாலினின் திமுக ஆட்சியின் அருமையை மக்கள் புரிந்து கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.