உலக அழகியாக 23 வயது தாய்லாந்து மாணவி தேர்வு - யார் இந்த ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி?
2025 உலக அழகியாக தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2025 உலக அழகி போட்டி
2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப்போட்டி தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கி, பல்வேறு சுற்றுகளாக நடைபெற்று வந்தது.
இதில், 108 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியின் இறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது.
இதில், தாய்லாந்தை சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவியான ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி (Opal Suchata Chuangsri) உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
2024 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற கிறிஸ்டினா பிஸ்கோவா, உலக அழகிக்கான கிரீடத்தை ஓபல் சுச்சாட்டாவிற்கு சூட்டினார்.
அந்த கிரீடத்தில் 1,770 ஜொலிக்கும் வைரங்கள் இருக்கும். இவை 175.49 காரட் எடை கொண்டிருக்கும். அவற்றுடன் ரூ.3 கோடி மதிப்பிலான 18-காரட் வெள்ளை தங்கமும் இருக்கும். வெற்றி பெறுபவருக்கு ரூ.1.15 கோடி ரொக்கமாக வழங்கப்படும்.
யார் இவர்?
தாய்லாந்து நாட்டிலிருந்து உலக அழகிப் பட்டம் வென்ற முதல் பெண் என்ற சாதனையை ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி படைத்துள்ளார்.
சர்வதேச விவகாரங்கள்(International Relations) தொடர்பாக படித்து வரும் இவர், எதிர்காலத்தில் தூதுவராக பொறுப்பேற்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
16 வயதிலேயே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், தொடக்க நிலையிலேயே அதை அடையாளம் கண்டு அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டார்.
இதன் பின்னர் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து, மார்பக புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.