களத்திலேயே திடீரென கதறி அழுத டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால், ரசிகர்கள் அதிர்ச்சி - நடந்தது என்ன?

rafael nadal breaks down tennis star into tears
By Swetha Subash Jan 28, 2022 11:33 AM GMT
Report

உலகின் முன்னணி டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் திடீரென களத்திலேயே கதறி அழுத சம்பவம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிராண்ட் ஸ்லாம் பட்டங்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஜோகோவிச்சின் தடுப்பூசி விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது நடால் அதனை சரி செய்துள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

இதில் இத்தாலியை சேர்ந்த மேட்டியோ பெர்ரேட்டினியை எதிர்த்து விளையாடிய ரஃபேல் நடால் 6 - 3, 6 - 2, 3 - 6, 6 - 3 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

சர்வதேச அளவில் பல வெற்றிகளை கண்டுள்ள நடால், இந்த அரையிறுதியில் வென்றவுடன் திடீரென கதறி அழுதார்.

டென்னிஸ் உலகில் தற்போது வரை நோவாக் ஜோகோவிச், ரோஜர் ஃபெடரர் மற்றும் ரஃபேல் நடால் அகிய மூவரும் தலா 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர்.

எனவே இன்னும் ஒரு வெற்றியை பெற்றுவிட்டால், 21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை நடால் பெறுவார்.

மீதமுள்ள ஜோகோவிச் மற்றும் ஃபெடரரால் இந்த தொடரில் பங்கேற்க முடியவில்லை. இந்த சாதனையை செய்யப்போவதை நினைத்த நடால், திடீரென மனம் கலங்கினார். தனது கிட் பேக்கிற்குள் முகத்தை மறைத்து வைத்து கதறி அழுதார்.

அவரின் ஆனந்த கண்ணீரை பார்த்த ரசிகர்கள் சிலர், அதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர்.

பின்னர் இதுகுறித்து பேசிய நடால், உலகின் மற்ற தொடர்களை விடவும் ஆஸ்திரேலிய ஓபன் எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால் இங்கு எனக்கு இதுவரை பெரியளவில் அதிர்ஷ்டம் இல்லாமல் போயுள்ளது.

கடந்த 2008-ல் ஒரே ஒருமுறை பட்டம் வென்றேன். 2012, 2017-ல் வெற்றிக்கு அருகில் சென்றபோதும் பட்டத்தை தவறவிட்டேன். இந்த முறை சிறப்பாக விளையாடுவேன் என்ற நம்பிக்கையுள்ளதாக கூறினார்.