அந்த இந்திய வீரருடன் மெசேஜ்ல பேசிருக்கேன்; சீக்கிரம் நேர்ல சந்திப்பேன் - டென்னிஸ் வீரர் ஜோகோவிச்!
விரைவில் சச்சின் மற்றும் கோலியை நேரில் சந்திப்பேன் என்று டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் விராட் கோலி. கடந்த 2008-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகில் அறிமுகமானார்.
இதுவரை 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8848 ரன்களும், 292 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 13848 ரன்களும் குவித்துள்ளார். மேலும், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பல்வேறு சாதனைகளையும் முறியடித்துள்ளார். குறிப்பாக சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அதேபோல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து வீரர்கள் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்தபடியாக கோலி இருக்கிறார்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே விராட் கோலியுடன் மொபைல் போனில் தொடர்பில் இருப்பதாக டென்னிஸ் ஜாம்பவான் நோவாக் ஜோக்கோவிட்ச் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது “இந்தியாவிற்கு செல்ல வேண்டும் என்று பல ஆண்டுகளாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
விரைவில் சந்திப்பேன்
இது வரை நான் இந்தியாவிற்கு ஒரு முறை மட்டும் தான் சென்றிருக்கிறேன். கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லியில் நடைபெற்ற கண்காட்சி போட்டியில் விளையாடுவதற்காக சென்றதது தான்.
மகத்தான வரலாறும், கலாச்சாரமும், மத நம்பிக்கைகளையும் கொண்ட அந்த நாட்டிற்கு விரைவில் செல்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. அங்கு உள்ள விளையாட்டு வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி போன்றவர்களுடன் நான் தொடர்பில் இருக்கிறேன்.
விரைவில் அவர்களை சந்திப்பேன். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் விராட் கோலியுடன் நான் மொபைல் போன் மேசேஜ் தொடர்பில் இருக்கிறேன். ஆனால் நான் இன்னும் அவரை நேரில் பார்க்கவில்லை. அவர் என்னை பற்றி பேசியது எனக்கு கெளரவமாக இருக்கிறது. கோலியின் விளையாட்டை நான் ரசிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.