நிழற்குடைகள் அமைப்பதில் ஊழல்.. போலி நிறுவனங்களுக்கு டெண்டர்...சிக்கும் எஸ்.பி.வேலுமணி

admk spvelumani chennaicorporation arapporiyakkam அறப்போர்இயக்கம் busstopscam எஸ்பிவேலுமணி
By Petchi Avudaiappan Mar 26, 2022 11:26 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

சென்னை மாநகராட்சியில் பேருந்து நிழற்குடைகள் அமைத்ததில் மாபெரும் ஊழல் செய்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அறப்போர் இயக்கம் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. சமீபத்தில் கூட இவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்சஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே அறப்போர் இயக்கம் எஸ்.பி.வேலுமணி மீது திடுக்கிடும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.

இதுதொடர்பாக அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெளியிட்ட அறிக்கையில், 2015 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி தங்களிடம் போதிய நிதி இல்லாத காரணத்தால் தனியாரிடம் பேருந்து நிழற்குடைகள் அமைக்கவும், அதில் விளம்பரங்கள் செய்யவும் அனுமதியளித்து டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டரின்போது எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான நபர்களுடைய 3 நிறுவனங்கள் வேறு நிறுவனத்தின் வருமான கணக்கை காட்டி டெண்டர் பெற்றனர்.

இதன்மூலம் 15 ஆண்டுகளுக்கு சுமார் 400 நிழற்குடைகள் மூலம் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் ரூ.437 கோடிக்கு மேல் ஊழல் செய்து லாபம் பார்ப்பார்கள். அதேசமயம் 2015,2016,2017,2018 ஆகிய ஆண்டுகளில் பேருந்து நிழற்குடைகள் அமைக்க தேவையான பணம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஷெல் நிறுவனம் மூலம் கொண்டு வந்ததை அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளோம்.

மேலும் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் டெண்டர் வேறு யார் கைக்கும் சென்று விடக்கூடாது என சதி செய்ததில் சென்னை மாநகராட்சிக்கு ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் டெண்டர் மோசடி, ஊழல், கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுதல், ஷெல் நிறுவனங்களை பயன்படுத்தி மீண்டும் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுதல் போன்ற செயல்கள் மூலம் மாநகராட்சிக்குன் ரூ.700 கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்த அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை, வருமான வரித்துறை ஆகியோரிடம் தெரிவித்துள்ளோம். அதேபோல் சென்னை மாநகராட்சி உடனடியாக இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும் எனவும் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.