ஜெலட்டின் குச்சிகள் வெடித்து விபத்து - 10 தொழிலாளர்கள் பரிதாமபாக உயிரிழப்பு
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள மாமிலப்பள்ளி கிராமம் அருகே செயல்படும் சுண்ணாம்பு குவாரியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்து 10 கூலி தொழிலாளர்கள் பலி.
மாமிலப்பள்ளி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கும் குவாரி உள்ளது.
சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கும் பணியில் பயன்படுத்துவதற்காக வெளியூர்களிலிருந்து ஜெலட்டின் குச்சிகளை வரவழைப்பது வழக்கம்.
அதே வகையில் இன்றும் ஜெலட்டின் குச்சிகள் வரவழைக்கப்பட்டு லாரியில் இருந்து இறக்கி வைக்கப்பட்டன. அப்போது எதிர்பாராதவிதமாக ஜெலட்டின் குச்சி ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது.
விபத்தில் ஏராளமான அளவில் ஜெலட்டின் குச்சிகள் தொடர்ந்து வெடித்து அந்தப் பகுதி போர்க்களம் போல் மாறியது. விபத்தில் ஜெலட்டின் குச்சிகளை இறக்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 10 பேர் உடல் சிதறி பரிதாபமாக மரணமடைந்தனர்.
மேலும் சிலர் படுகாயம் அடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
விபத்து பற்றிய தகவலறிந்த கடப்பா மாவட்ட எஸ்பி அன்பு ராஜன் உத்தரவின்பேரில் அங்கு சென்றுள்ள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.