ராட்டினத்தில் கோளாறு; அந்தரத்தில் 3 மணி நேரம் தவித்த பொதுமக்கள் - நடந்தது என்ன?
தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பொதுமக்கள் 3 மணி நேரம் அந்தரத்தில் தவித்துள்ளனர்.
ராட்டினத்தில் கோளாறு
சென்னை ஈசிஆர் சாலை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜிபி யுனிவர்சல் கிங்டம் எனப்படும் பொழுதுப்போக்கு பூங்காவிற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
இந்நிலையில், நேற்று மாலை பொழுது போக்கு பூங்காவில் இருந்த `டாப் கன்' எனப்படும் ராட்சத ராட்டினம் ஒன்றில் சுமார் 30 பேர் ஏறினர்.
ராட்டினத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்தரத்தில் ராட்டினம் நின்றுள்ளது. உடனடியாக அதில் சிக்கியிருந்தவர்கள் அச்சத்தில் கூச்சலிட்டுள்ளனர்.
பெண்கள், குழந்தைகள் உட்பட 30 பேர், 3 மணி நேரமாக 20 அடி உயரத்தில், அந்தரத்தில் தவித்துளனர்.
அதன் பிறகு, தீயணையப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து பத்திரமாக மீட்டுள்ளனர்.
தற்காலிக தடை
இதனால் விஜிபி பூங்காவை திறக்க தற்காலிக தடை விதித்து நீலாங்கரை போலீஸார் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
மேலும், ராட்டின விபத்து தொடர்பாக விளக்கம் கேட்டு, விஜிபி பொதுமேலாளருக்கு நீலாங்கரை காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
விளக்கம் அளித்து ஆவணங்களை சமர்ப்பித்த பின் பொழுதுபோக்கு பூங்காவை திறக்க காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதனிடையே மாநகராட்சி மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இன்று அங்கு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.