வழிபாட்டுத் தலங்கள் திறப்பு - பக்தர்கள் சாமி தரிசனம்!
ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் வழிபாட்டுத் தலங்கள் இன்று முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 10-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் மாநிலத்தில் நோய்த் தொற்று குறையத் தொடங்கியுள்ளதை தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
வரும் 12-ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணிகள் நேற்று நடைபெற்றது. இன்று காலை முதல் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.