கோவில் இருந்த இடத்தில்தான் ஞானவாபி மசூதி; தொல்லியல் துறை தகவல் - கிளம்பிய சர்ச்சை!
ஞானவாபி மசூதி கட்டுவதற்கு முன்னர் கோவில் இருந்ததாக தொல்லியல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ஞானவாபி மசூதி
உத்தர பிரதேசம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இதன் அருகில் ஞானவாபி மசூதி உள்ளது. இந்நிலையில், அந்தப் பகுதியில் கோயிலை இடித்துவிட்டு, முகலாய மன்னர்கள் மசூதி கட்டியதாக எழுந்த சர்ச்சை பேசுபொருளானது.
மேலும், மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதி கோரி 5 இந்துப் பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையில், இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை கள ஆய்வு நடத்த மாவட்ட நீதிபதி அஜயா கிருஷ்ண விஷ்வேஷா உத்தரவிட்டார்.
ஆய்வில் தகவல்
அதன் அடிப்படையில், மொத்தம் 2150.5 சதுர மீட்டர் அளவுக்கு வேலி அமைத்து அறிவியல்பூர்வமான ஆய்வு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கள ஆய்வு முடிந்த நிலையில் 839 பக்க ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தொல்லியல் துறை சமர்ப்பித்தது. அதில், ஞானவாபி மசூதி 17-ம் நூற்றாண்டில் கட்டப்படுவதற்கு முன்பு அங்கு கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் தென்படுகின்றன.
மேற்கு பகுதியில் தற்போதுள்ள சுவர், இந்து கோயிலின் மீதமுள்ள சுவர். இந்தச் சுவர் செங்கற்களாலும், மோல்டிங் சிற்பங்களாலும் கட்டப்பட்டுள்ளது. அங்கு முன்பு இந்து கோயில் இருந்துள்ளது. கிடைத்த கல்வெட்டுகள், சிற்பங்கள் உட்பட ஏராளமான பொருட்கள் அங்கு ஏற்கெனவே கோயில் இருந்ததை காட்டுகின்றன. மசூதி கட்டுவதற்கு ஏற்கெனவே இருந்த தூண்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கட்டிடத்தின் ஒரு அறைக்குள் அரபு - பாரசீக கல்வெட்டு காணப்பட்டது. அது,அவுரங்கசீப்பின் 20-வது ஆட்சிஆண்டில் மசூதி கட்டப்பட்டுள்ளதாக (1676-77) குறிப்பிடுகிறது. எனவே, 17- ம் நூற்றாண்டில் அவரது ஆட்சியின் போது ஏற்கெனவே அங்கு இருந்த கட்டிடம் அழிக்கப்பட்டதாகத் தெரிகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.