காலை பிடித்து இழுத்து சென்ற முதலை - தப்பித்த பெண்ணின் திக் திக் நிமிடங்கள்
ஜாம்பியாவில் படகு சவாரி செய்துகொண்டிருந்த பெண்ணின் காலை முதலை இழுத்துப் பிடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இங்கிலாந்தைச் சேர்ந்த 18 வயதான எமிலி என்பவர் தன்னுடைய நண்பர்களுடன் விடுமுறைக்காக தென்னாப்பிரிக்க நாடான ஜாம்பியாவிற்குச் சென்றிருந்தார். க்டோரியா அருவியின் அருகில் எமிலி தன்னுடைய நண்பர்களுடன் படகுசவாரி சென்றுள்ளார்.
அப்போது அங்கே படகின் அருகில் வந்த முதலை எமிலியின் காலைப் பிடித்து அவரை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றதாகவும், அவரின் நண்பர்கள் காப்பாற்றினார்கள் என்றும் முன்னாள் ராணுவ மேஜரான எமிலியின் தந்தை தெரிவித்துள்ளார்.
அவரைத் தாக்கிய 10 அடி நீளமுள்ள முதலை ஆப்பிரிக்காவை சேர்ந்த நைல் முதலை என்று அழைக்கப்படுகிறது. இந்த இனத்தை சேர்ந்த முதலைகள் மிகவும் ஆக்ரோஷமான குணம் கொண்டவை என்றும், தன் எதிரில் இருக்கும் எந்த தன்னுடைய பார்வையின் வரம்புக்குள் இருக்கும் எந்த மிருகத்தையும் தாக்கும் பலம் கொண்டது என்றும் கூறப்படுகிறது.
எமிலியை ஒரு பெரிய முதலை இழுத்துச் செல்வதை பார்த்த அவரின் நண்பர்கள் முதலில் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்துள்ளனர். பின்னர் சுதாரித்துக் கொண்டு, முதலையைத் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். முதலையின் பிடியில் இருந்து எமிலியை காப்பாற்ற வேண்டுமானால் முதலையே எமிலியை விடுவித்தால் தான் நடக்கும்.
எனவே முதலையின் வாயிலிருந்து எமிலியை விடுவிப்பதற்கு அதனை தொடர்ந்து தாக்கியுள்ளார்கள். ஒருவழியாக எமிலியின் காலை முதலை விடுவித்த பின்னர் நண்பர்கள் அவரை உடனே அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று காயங்களுக்கு சிகிச்சை அளித்ததாகவும் கூறப்படுகிறது.
மரணப்படுக்கை வரை சென்று மீண்ட எமிலி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.