"நோன்பு இருக்க கூடாது" என முஸ்லிம் மாணவர்களை கண்டித்த ஆசிரியர்கள் இடமாற்றம்
முஸ்லிம் மாணவர்களிடம் நோம்பு இருக்கக்கூடாது என கண்டித்த ஆசியர்களை இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனவள்ளி பகுதி அருகே இயங்கிவரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில், முஸ்லிம் மாணவர்கள் அதிகளவில் படித்துவரும் நிலையில் அவர்கள் ரம்ஜானுக்காக உணவு உட்கொள்ளாமல் நோம்பு இருந்து வந்துள்ள்ளனர்.
இதனை கண்டித்த கணித ஆசிரியர் ஷங்கர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார், மாணவர்களிடம் நோம்பு இருக்கக்கூடாது எனவும் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் உடல்நலம் பாதிக்கப்படும் என்றும் வகுப்பறையில் பாடங்களை சரிவர கவனிக்க முடியாமல் உடல் சோர்ந்து போகும் என்றும் கூறியுள்ளனர்.
இதை மாணவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்ததை அடுத்து பள்ளி வளாகத்தில் குவிந்த 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் நோம்பு இருக்ககூடாது என்று கூறிய ஆசிரியர்களை கண்டித்து தர்ணாவில் ஈடுப்பட்டனர்.
பெற்றோர்களுடன் சேர்ந்து மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரப்பரபான சூழல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து தகவல் அறிந்து பள்ளி வளாகத்திற்கு வந்த காவல் துறையினர் பெற்றோர்களிடம் நடத்திய பேச்சுவார்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், கணித ஆசிரியர் ஷங்கர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் இருவரையும் இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஷ்வரி உத்தரவு பிறப்பித்தார்.
இதனை அடுத்து இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.