பள்ளியை ஏன் திறந்தீர்கள்? உயிரிழந்த பள்ளி மாணவியின் தந்தை சரமாரி கேள்வி - காலில் விழுந்த உதவி தலைமை ஆசிரியர்
ஆற்றில் குளிக்கும்போது உயிரிழந்த மாணவியின் தந்தையின் காலில் விழுந்து பள்ளியின் உதவி தலைமையாசிரியை மன்னிப்பு கோரிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போட்டிக்கு சென்ற மாணவிகள்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா இலுப்பூர் ஒன்றியம் பிலிப்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் 15 மாணவிகள், மாநில அளவிலான கால்பந்து போட்டியில் விளையாட தகுதி பெற்றனர்.
இதற்கான போட்டியில் பங்கேற்க திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே ஏளூர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு கடந்த 14-ம் தேதி மாலை ஆம்னிவேனில் 15 மாணவிகளை ஆசிரியர்கள் திலகவதி, ஜெபசகேவியு இப்ராஹிம் ஆகியோர் அழைத்து சென்றனர்.
கடந்த 15-ம் தேதி நடந்த கால்பந்து போட்டியில் அந்த மாணவிகள் தோல்வி அடைந்தனர். இதையடுத்து மாணவிகன் அதே வேனில் புதுக்கோட்டை புறப்பட்டனர்.
தண்ணீரில் முழ்கி உயிரிழப்பு
மாயனூர் கதவணை பாலம் வழியாக வேன் சென்றபோது, அங்கு வேனை காவிரி ஆற்றில் குளித்து விட்டு போகலாம் என ஆசிரியர்களிடம் மாணவிகள் கேட்டுள்ளனர்.
இதையடுத்து மாயனூர் செல்லாண்டியம்மன் கோயில் படித்துறை பகுதியில் மாணவிகள் அழைத்து செல்லப்பட்டனர். கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவு தூரம் மாணவிகள் சென்றனர்.
பகல் 12 மணி அளவில் மாணவிகள் ஆற்றில் குளிக்க இறங்கினர். இதில் 12 மாணவிகள் சேர்ந்து முழங்கால் அளவு தண்ணீரில் குளித்துள்ளனர். அப்போது 2 அடி தூரம் தள்ளி சென்ற 8 மாணவிகள் திடீரென 11 ஆடி ஆழத்தில் சிக்கி தத்தளித்தனர்.
இவர்களில் பிலிப்பட்டியை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி சோபியா (13), 8-வது படிக்கும் தமிழரசி(14), 6-வது படிக்கும் இனியா (12), லாவன்யா (12) ஆகிய 4 பேர் நீரில் மூழ்கினர். மற்ற 5 பேரும் மீட்கப்பட்டனர்.
தகவலறிந்து கரூர் தீயணப்பு மீட்புபடை வீரர்கள் வந்து ஆற்றில் இறங்கி 4 மாணவிகளின் சடலங்கை மீட்டு பரிசல்கள் மூலம் கரைக்கு கொண்டு வந்தனர்.
காலில் விழுந்த உதவி தலைமையாசிரியை
இது குறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதனிடையே, மாணவிகள் இறந்த சம்பவத்தை அடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் பெட்டுமணி, இடைநிலை ஆசிரியர் ஜெபசகேவியு இப்ராஹீம், பட்டாதாரி ஆசிரியர் திலகவதி ஆகிய 3 பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடம் என்று திறக்கப்பட்டது. இதனிடையே, உயிரிழந்த மாணவி தமிழரசியின் தந்தை ராஜ்குமார் பள்ளிக்கு வந்துள்ளார்.
அப்போது, எனது மகளின் இறப்பு சான்றிதழ்கூட இன்னும் வழங்கவில்லை. அதற்குள் பள்ளியை திறந்துவிட்டீர்கள் என்று அங்கிருந்த உதவி தலைமையாசிரியை பரிமளாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, திடீரென உதவி தலைமையாசிரியை பரிமளா மாணவியின் தந்தை ராஜ்குமாரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.
தொடர்ந்து அங்கிருந்த கல்வித்துறை அதிகாரிகளிடம் ராஜ்குமார் வாக்குவாதம் செய்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.