முதலமைச்சர் வாகனத்தின் மீது டீ கிளாஸை எறிந்த நபர் - என்ன காரணம்?
நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற வாகனத்தின் மீது டம்ளரை வீசிய டீ மாஸ்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் முன்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சி அலுவலகம் முன்பு கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு, தனியார் உரத்தொழிற்சாலையில் 22 மெகாவாட் சூரிய ஒளி மின்சார உற்பத்தி நிலையத்தையும், ரூபாய் ஆயிரம் கோடி மதிப்பிலான அறைகலன் பூங்கா திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
இதனை முன்னிட்டு கன்னியாகுமரி சென்ற மு.க.ஸ்டாலினுக்கு காவல்கிணறு எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது முதல்வர் காரின் மீது திடீரென ஒரு டீ கிளாஸ் வந்து விழுந்தது. இதனை அங்கிருந்த டீக்கடை மாஸ்டர்தான் எறிந்துள்ளார். இதனைக் கண்ட போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். ஆனால் டீ மாஸ்டர் அந்த வழியாக சென்ற ஒரு பஸ்ஸில் ஏறி அவர் தப்பி சென்றுவிட்டார்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த நபர் பணகுடியைச் சேர்ந்த பாஸ்கர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த டீக்கடையில் வேலைக்கு சேர்ந்து 2 நாட்கள் ஆனதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பாதுகாப்பிற்கு நின்ற காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது உட்பட 4 பிரிவுகளின் கீழ் பாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் அவரை தேடி வந்த நிலையில் அவர் காவல்கிணறு பக்கம் வராமலேயே இருந்தார்.
இதனிடையே நேற்று வழக்கம்போல் கடைக்கு வேலைக்கு வந்த அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அதில் டீ குடிக்க நின்ற மக்களை போலீசார் விரட்டி விரட்டி அடித்ததாகவும், இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டதாகவும், அந்த ஆத்திரத்தில் தான் டீ கிளாஸை எடுத்து வீசியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.