டவ்தே புயல் சேதம்..! நிவாரணம் அறிவிப்பு..!
குஜராத்தில் நேற்று முன்தினம் இரவு கரையைக் கடந்த 'டவ்தே' புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. புயல் மற்றும் வெள்ளத்துக்கு இதுவரை 7 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நுாற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ள நிலையில், மரங்கள் சாய்ந்ததால், மின் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புயல் சேதங்களை பார்வையிடுவதற்காக பவ்நகர் சென்ற பிரதமர் மோடியை முதல்வர் விஜய்ரூபானி வரவேற்றார்.
காலை 9.30 மணிக்கு தனி விமானம் மூலம் குஜராத் மாநிலம் பவ்நகர் சென்ற பிரதமர் மோடி, மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடி ஆய்வு செய்தார்.. பின்னர், புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட உனா, டியூ, ஜபராபாத், மஹூவா உள்ளிட்ட பகுதிகளை மோடி விமானம் மூலம் பார்வையிட்டார்.
இதன் பின்னர், மாநிலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜய்ரூபானி பங்கேற்றனர்.
இதன் பின்னர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், டவ்தே புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுடன் இந்திய அரசு துணை நிற்பதுடன், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.