புற்றுநோயை குணப்படுத்த ரூ.100க்கு மாத்திரை - பிரபல ஆராய்ச்சி நிறுவனம் சாதனை!
டாடா இன்ஸ்டிட்யூட் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மாத்திரையை கண்டுபிடித்துள்ளது.
டாடா இன்ஸ்டிட்யூட்
டாடா இன்ஸ்டிட்யூட் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக புற்றுநோயில் இருந்து மீண்டும் வருவதைத் தடுக்கும் வகையிலான ஒரு மாத்திரையை கண்டுபிடித்துள்ளது.
இது நோயாளிகளுக்கு இரண்டாவது முறையாக புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும் என்றும் கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி போன்ற சிகிச்சையின் பக்க விளைவுகளை 50 சதவீதம் குறைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் மாத்திரை
இந்த மாத்திரை, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஒப்புதலுக்குப் பின் வரும் ஜூன் – ஜூலை மாதங்களில் சந்தையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.100க்குள் இருக்கலாம் என அதன் ஆராய்ச்சி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
புற்றுநோய் செல்கள் இறக்கும்போது, அவை குரோமாடின் துகள்கள் எனப்படும் சிறிய துண்டுகளாக உடைந்து, ரத்த ஓட்டத்தின் மூலம் உடலின் மற்ற பகுதிகளுக்குச் சென்று ஆரோக்கியமான செல்களுக்குள் செல்ல முடியும். குரோமாடின் துகள்கள் ஆரோக்கியமான குரோமோசோம்களுடன் இணைந்து புதிய கட்டிகளை ஏற்படுத்தலாம்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண எங்கள் மருத்துவர்கள் தீவிரமாக உழைத்து ரெஸ்வெராட்ரோல் மற்றும் காப்பர் (R+Cu) கொண்ட புரோ-ஆக்ஸிடன்ட் மாத்திரைகளை கண்டறிந்துள்ளதாக ஆராய்ச்சி குழுவில் இடம்பெற்றிருந்த டாடா மெமோரியல் மருத்துவமனையின் மூத்த புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜேந்திர பத்வே தெரிவித்துள்ளார்.