தமிழகத்தில் கொரோனா பரவல்: டாஸ்மாக், திரையரங்குகளை மூடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
கொரோனா தொற்று பரவல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதை தொடர்ந்து டாஸ்மாக் பார், திரையரங்குகள், கோவில்களை மூடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, “2020ம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனாவின் தாக்கம் தணிந்து வந்தது. ஆனால், மறுபடியும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கடந்த 21ம் தேதி நிலவரப்படி 47 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானது. கடந்த பிப்ரவரிக்கு பின் தொற்று பரவல் 4.5 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் பல நகரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் 5.81 கோடி மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மாவட்ட அளவில் நிலைமையை ஆராய்ந்து கட்டுப்பாடுகள் விதிக்க மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஆகவே தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவாமல் தடுக்க, டாஸ்மாக், பார்கள், திரையரங்குகள், கோவில்கள் விளையாட்டு மைதானங்களை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.