தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள் மேலும் 3 மாதங்கள் இயங்க அனுமதி?
டாஸ்மாக் பார்கள் இயங்க மேலும் 3 மாதங்களுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளன.
ஆலோசனைக் கூட்டம்
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் அருகே இயங்கும் பார்களுக்கு உரிமம் பெற சில முக்கிய விதிகள் உள்ளன.
அதன்படி, பார் செயல்படும் கட்டிடத்திற்கு திட்ட அனுமதி, நில அனுமதி, கட்டிட உறுதித்தன்மைச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.

ஆனால், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் முறையான அனுமதி இல்லாத கட்டிடங்களில் பார்கள் இயங்குவதாகவும், போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு புகார்கள் வந்துள்ளன.
இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
முக்கிய முடிவுகள்
தற்போது இயங்கும் பார்களுக்கு 3 மாதங்கள் தற்காலிக அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மேலும், பார்களுக்கு உள்ள 54 விதிகளில் சில திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.
இனிமேல் சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ. அல்லது டி.டி.சி.பி. வழங்கிய கட்டிட மற்றும் நில அனுமதிகள், உணவு பாதுகாப்பு மற்றும் தீயணைப்புத் துறை சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக சரிபார்க்கப்படும்.
முறையான அனுமதிகள் இல்லாத கட்டிடங்களில் பார்களுக்கு உரிமம் வழங்கப்படாது.

போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் புதிய விதிகள் கொண்டு வரப்பட உள்ளன.
மேலும், இந்த திருத்தங்கள் அனைத்தும் எப்.எல்.2 என்ற மனமகிழ் மன்றங்களுக்கும் பொருந்தும் எனவும் பார் டெண்டர் விடுவதற்கான விதிகளிலும் திருத்தங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.