டாஸ்மாக் பார் உரிமையாளரை வெட்டிக் கொன்ற மர்ம கும்பல்

By mohanelango May 12, 2021 08:23 AM GMT
Report

நெல்லை மாவட்டம் கொண்டாநகரம் அருகே டாஸ்மார் பார் உரிமையாளரை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டது.

இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பேட்டை மயிலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் என்ற கருத்தப்பாண்டி. இவர் கொண்டாநகர் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் பார் எடுத்து நடத்தி வருகிறார்.

அதன் அருகிலேயே கோழி, ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவர் வளர்த்து வந்த ஆடு ஒன்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேட்டை எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சிலர் மீது கணேசன் ஆடு திருடப்பட்டது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்த விசாரணை நடந்து வரும் நிலையில் பார் அமைந்துள்ள பகுதியிலேயே ஆடு, கோழிகள் வளர்ப்பதால் இரவு நேரத்தில் கணேசன் அங்கு சென்று தங்குவது வழக்கம்.

டாஸ்மாக் பார் உரிமையாளரை வெட்டிக் கொன்ற மர்ம கும்பல் | Tasmac Bar Owner Brutally Murdered In Tirunelveli

இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று பாரில் தூங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பி அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இதில் பலத்த காயம் அடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் சேரன்மகாதேவி ஏ.எஸ்.பி. பிரதீப், சுத்தமல்லி காவல்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் உடலைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆடு திருடப்பட்டதாக புகார் கொடுத்ததில் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை நடந்ததா அல்லது வேறு எதுவும் காரணம் உண்டா என சுத்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருவதுடன், கொலையாளிகளையும் தேடிவருகின்றனர்.