மகளிர் குழு கடனைக் கட்டச் சொல்லி மிரட்டல் - நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்!
திட்டக்குடி அருகே மகளிர் குழு கடன் தொகையைக் கட்டச் சொல்லி குண்டர்களை வைத்து மிரட்டியதால் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட பெண்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு வேலை கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு உணவுக்கே கஷ்டப்பட்ட வருகின்றனர். ஆனால், எல்.என்.டி, ஆர்.பி.எல், ஸ்பீங்கர், சி.சி.எஃப்.டி, டுசன், ஸ்டாட்டின், எக்டாஸ் போன்ற தனியார் நிறுவனம் பொதுமக்கள் வாங்கி உள்ள மகளிர் குழு சிறு கடன்களுக்கு, பணம் கட்டியே ஆக வேண்டும் என்று குண்டர்களை வைத்து மிரட்டி வருகின்றது.
இதனையடுத்து, கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இளமங்கலம் கிராமத்தில் மகளிர் குழு பெண்களை லோன் கட்ட சொல்லி மிரட்டியதால் ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதி பெண்கள் ஈடுபட்டனர்.
இது குறித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள் கூறியதாவது -
இரவு 11 மணி ஆனாலும் பணத்தை வாங்கிக் கொண்டுதான் செல்வோம் என்று வீட்டு வாசலிலேயே உட்கார்ந்து பொதுமக்களை தரக்குறைவாக பேசுகிறார்கள். தமிழக அரசு கொடுத்த கொரோனா நிதி ரூ.2000 வாங்கினீர்கள் அந்த பணத்தை உடனே கட்ட வேண்டும் என்று வீடுவீடாக சென்று கேட்டு பொதுமக்களை துன்புறுத்துகின்றனர். ஊரடங்கு முடிந்தவுடன் வேலைக்கு சென்று அதில் வரும் வருமானத்தை கட்டுகிறேன் என்று கூறியும் முடியாது உடனே கட்ட வேண்டுமென்று கட்டாயப்படுத்துகின்றனர்.
நாங்கள் இந்த கொரானா நேரத்தில் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளோம். குழந்தைகளுக்கு சரியான உணவு வழங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, கொரானா பொது முடக்கம் முடியும் வரை தனியார் நிதி நிறுவனங்கள் கடன் தொகையை வசூலிக்கத் தடை உத்தரவு வழங்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறினர்.