தமிழகத்தில் பிப்ரவரி 1-ந் தேதி முதல் கடுமையான குளிர் நீடிக்கும் - தனியார் வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் நாளை முதல் வருகிற 2-ந் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக டிசம்பர், ஜனவரி மாதத்தில் குளிர் அதிகரித்து பின்னர் படிப்படியாக குறையத் தொடங்கும். ஆனால் தற்போது அவ்வப்போது மேக மூட்டம் காரணமாக சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.
பகல் நேரங்களில் மந்தமாகவும் இரவு நேரங்களில் சற்று சூடாகவும் இருந்து வருகிறது. காற்றின் திசை மாற்றம் காரணமாக வரும் நாட்களில் இரவு நேரத்தில் வெப்ப நிலை குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே நாளை முதல் வருகிற 2-ந் தேதி வரை தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், “அடுத்த வாரம் காற்றின் திசை மாறக்கூடும். வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் குளிர் அதிகரிக்கும். பிப்ரவரி 5-ந் தேதி வரை கடுமையான குளிர் நீடிக்கும். சென்னை புறநகர் பகுதிகளில் வெப்ப நிலை 18 டிகிரி செல்சியஸ் வரை கூட இருக்கலாம்.
பிரப்வரி 5-ந் தேதிக்கு பிறகு வெப்பநிலை சிறிது உயரும். பிப்ரவரி நடுப்பகுதியில் கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்றார்.