துபாயில் கொடிகட்டி பறக்கும் தமிழர்களின் பெருமை - மகிழ்ச்சியாக கண்டுகளித்த மு.க.ஸ்டாலின்

tamilnadu mkstalin burjkhalifa DubaiExpo2020 BurjKhalifa
By Petchi Avudaiappan Mar 26, 2022 04:40 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

துபாயின் உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபா மீது ஒளிபரப்பப்பட்ட தமிழ்நாடு பற்றிய காட்சிப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையுடன் கண்டுகளித்தார். 

துபாயில் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி உலக எக்ஸ்போ கண்காட்சி தொடங்கியது. அந்த கண்காட்சி மார்ச் 31 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த கண்காட்சியில் தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் மார்ச் 25 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை சுற்றுப்பயணமாக துபாய் சென்றுள்ளார். நேற்று உலக கண்காட்சியில், இந்திய அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கினை அவர் திறந்து வைத்தார். பின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்த முதலமைச்சர் ஸ்டாலின், துபாய் வாழ் தமிழர்களிடையே உரையாற்றினார்.

தமிழ்நாடு வாரத்தை முன்னிட்டு துபாயில் உள்ள 2,217 அடி உயரம் கொண்ட உலகின் அதிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபா மீது தமிழ்நாடு பற்றிய காட்சிப்படம் ஒளிபரப்பப்பட்டது. அதில் தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழ்நாட்டின் சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் பற்றிய காட்சிகள் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக தமிழரின் பண்பாட்டையும் பெருமையையும் பறைசாற்றும் வகையில் கீழடி மற்றும் பொருநை ஆற்றங்கரையின் காணொலியும் ஒளிபரப்பப்பட்டது.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மு.க.ஸ்டாலின் 3200 ஆண்டுகள் தொன்மையுடைய நமது வரலாற்றின் பெருமை வாய்ந்த கீழடி & பொருநை ஆற்றங்கரை நாகரிகங்களின் சிறப்பை விளக்கும் காணொளி, உலகின் உயரமான கட்டடமான #BurjKhalifa-வில் ஒளிபரப்பப்பட்டது. குழுமியிருந்த உலக மக்கள் அனைவரும் கண்டு வியந்தனர். இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுதுவோம்! என கூறியுள்ளார்.