சென்னையில் தொடரும் கனமழை : காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்தது
தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் பரவலாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னையில், தொடர் கனமழையால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
அந்த வகையில் தக்காளி ஒரு கிலோ ரூ.120க்கும், கத்தரிக்காய் ரூ.60 க்கும், வெண்டைக்காய் ரூ.60க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதேபோல் பீன்ஸ் ரூ. 45 க்கும், அவரக்காய் ரூ.60க்கும் விற்பனையாகிறது. சௌ சௌ ரூ.25க்கும், நூக்கல் ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் முட்டைகோஸ் விலை ரூ.20 ஆகவும், வெங்காயம் ரூ.40 ஆகவும், உருளைக்கிழங்கு ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நேற்றைய விலையை விட 10 முதல் 15 சதவீதம் விலை அதிகரித்துள்ளது.
தொடர் கனமழையின் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதனால், சில்லறை வியாபார கடைகளிலும் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. காய்கறிகளின் சாகுபடியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் ஓசூர், ராயக்கோட்டை,கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கரில் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இங்கிருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது, தொடர் கனமழையால் தக்காளி, புதினா, கொத்தமல்லி, கொத்தவரங்காய், கேரட், பீட்ரூட் போன்ற காய்கறி பயிர்கள் நீரில் மூழ்கி இருக்கின்றன. இதனால் காய்கறி அறுவடை வெகுவாக குறைந்துள்ளது. இதனால், விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.