வன்னியர் சமுதாயத்திற்கு தமிழ்நாடு அரசு கொடுத்த 10.5% இட ஒதுக்கீடு செல்லாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கடந்த பிப்ரவரி மாதம் வன்னியர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்காண தீர்மனம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு அப்போதைய தமிழக ஆளுநராக இருந்த பன்வாரி புரோகித் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவான எம்பிசி பிரிவில் 10 மேற்பட்ட ஜாதியினர் உள்ள நிலையில் ஒரு பிரிவினருக்கு மட்டும் 10.5 சதவீதம் வழங்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இடைக்கால தடை கேட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தாமல் இது போன்ற ஒதுக்கீடு வழங்கக்கூடாது என கூறி வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஓதுக்கீட்டை ரத்து செய்தனர்.
சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், வன்னியர் சமுதாயத்திற்கு தமிழ்நாடு அரசு கொடுத்த 10.5% இட ஒதுக்கீடு செல்லாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை உறுதிப்படுத்தி, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தர மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு; ஆனால், இந்த வழக்கில் அதற்கான சரியான காரணங்கள் கூறப்படவில்லை என்று தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வன்னியர்களுக்கான 10.5% உள்இடஒதுக்கீடு குறித்து சரியான, நியாயமான காரணங்களை தமிழக அரசு தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு வேலை, கல்வி நிறுவனங்களில் சேர்ந்தோரின் நியமனங்கள் ரத்தாகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.