சிறுமியைத் திருமணம் செய்து கொடுமைப்படுத்திய ரவுடி - போக்சோ சட்டத்தின் கீழ் கைது!
16 வயது சிறுமியை திருமணம் செய்து கொடுமைப்படுத்திய ரவுடியையும், தாயாரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சென்னை, தண்டையார்பேட்டை, வ.உ.சி.நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சரத் (28). இவர் அப்பகுதியில் ரவுடியாக உள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், சரத் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது பெண்ணை காதலித்துள்ளார். கடந்த 10ம் தேதி அன்று, பெரியப்பாளையம் கோவிலில் அச்சிறுமியை சரத் திருமணம் செய்துள்ளார்.
இதனையடுத்து, அச்சிறுமி வீட்டில் சமையல் சரியாக செய்யவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த சரத் சிறுமியின் தலை, கால், கைகளில் சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளார்.
வலி தாங்க முடியாமல் அச்சிறுமி கதறி துடித்து அழுதுள்ளார். செய்வது அறியாமல் திகைத்து நின்ற சரத் வீட்டை விட்டு தப்பியுள்ளார். சரத் அச்சிறுமியை தாக்கியபோது, தடுத்து நிறுத்தாமல் மாமியார் தேசம்மாள் (48) உடந்தையாக இருந்து வேடிக்கைப் பார்த்துள்ளார்.
அச்சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். உடனே அந்த சிறுமியை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
உடனே, இது குறித்து தண்டையார்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினார்கள்.
சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சரத் மற்றும் தேசம்மாளை கைது செய்தனர்.
சிறுமியை திருமணம் செய்து கொடுமைப்படுத்திய ரவுடியையும், தாயாரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனையடுத்து, இவர்கள் இருவரையும் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.