விதிமுறை மீறி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் வெளியே வந்தால்... - கமிஷனர் பிரதீப்குமார் பரபரப்பு பேட்டி
கஜானந்தா அறக்கட்டளை இணைந்து நவ இந்தியா பகுதியில் "வளம்" என்ற பெயரில் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆலோசனை சேவை மையத்தை துவங்கியுள்ளனர்.
இந்த மையத்தின் துவக்க விழா நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் கலந்து கொண்டு மையத்தை திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது -
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கோவை மாநகர காவல்துறை உடனடி நடத்தும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் குற்றம் நடப்பதற்கு முன்னதாகவே அதனை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட சிலர் மனரீதியான பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
எனவே அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் கண்ணியத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக இந்த இலவச ஆலோசனை மையம் துவங்கப்பட்டுள்ளது. இங்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் அடையாளங்கள் ரகசியம் காக்கப்படும். மாநகர சிக்னல்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
கோவையில் இந்த கட்டுப்பாடுகள் முழுமையாக அமல்படுத்தப்படும். காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடுவர்.
ஞாயிறு முழு ஊரடங்கின் போது வெளியில் வரும் மக்களை அடிக்காமல் இருக்க ஆலோசனை நடத்தியுள்ளீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "ஊரடங்கில் வெளியே வரும் மக்களை அடிப்பது என்பது இருக்காது.
காவல்துறையினர் பொதுமக்களை அடிக்கமாட்டார்கள். நேர்மையான காரணங்களுக்காக வெளியே வரும் மக்களுக்கு நாங்கள் உதவுவோம்"
இவ்வாறு அவர் கூறினார்.