10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வந்துக் கொண்டிருக்கிறது.
இதனால், 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவித்து முன்னதாக தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், 10 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அரசு தெரிவித்திருந்தது.
இதற்கிடையில், கொரோனா அதிகரித்து வருவதால் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்து, ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.
இதனையடுத்து, தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா காரணமாக,10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
மேலும்,10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ம் தேதி தொடங்க இருந்த திருப்புதல் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.