700 ஆயுள் தண்டனைக் கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யலாம் – தமிழக அரசு
பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -
பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக சட்டப் பேரவையில் கடந்த 13.09.2021 அன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், சிறைக் கைதிகளின் முன் விடுதலை தொடர்பான சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு, மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாள் வருகிற 15-ம் தேதியன்று வரும் நிலையில், இந்திய அரசியலமைப்பின் 161 வது பிரிவின் கீழ் நீண்ட காலம் சிறை வாசம் அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆனால், வன்கொடுமை, பயங்கரவாதம், பாலியல் வன்கொடுமை, மதம் மற்றும் சாதி மோதலில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்படமாட்டர்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.