‘என்ன நடிப்புடா சாமி... சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்பா...’ - ஜெயக்குமார் காட்டம்!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். மெரினாவில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களிலும் சசிகலா மரியாதை செலுத்தினார். சசிகலா வருகையையொட்டி எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 2 வருடம் சிறை சென்ற சசிகலா பெங்களூரு சிறையிலிருந்து கடந்த ஜனவரி மாதம் விடுதலையானார். பின்னர் அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்தார்.
இச்செயல் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் சசிகலா ஈடுபடுவார் என எதிர்பார்த்திருந்த அவரின் ஆதரவாளர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டிருக்கும் சசிகலா இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
மலர்தூவி மரியாதை செலுத்திய போது திடீரென கண் கலங்கினார். சசிகலா வருகையால் மெரினாவில் ஆதரவாளர்கள் குவிந்தனர். இந்நிலையில், சசிகலா கண் கலங்கியது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறியதாவது -
யானை பலம் கொண்ட அதிமுகவை ஒரு கொசு தாங்கிக்கொண்டிருப்பதாக சொல்வது நகைச்சுவை. அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை. அமமுகவில் அவருக்கு இடம் தந்தால் ஆட்சேபனை இல்லை. சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தியிருப்பது சட்ட விதிமீறல். சசிகலா நடிப்பிற்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம். தமிழக மக்கள் ஒரு நாளும் விருது தர மாட்டார்கள். ஜெயலலிதா நினைவிடத்திற்கு தினமும் பலர் செல்கின்றனர். அதில் சசிகலாவும் ஒருவர்.
இவ்வாறு அவர் காட்டமாக கூறினார்.
