'கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைமையில் தான் காவல்துறையினர் பணியாற்றுகிறார்கள்' - அண்ணாமலை வருத்தம்
கீரனூர் அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை திருடர்கள் நேற்று இரவு வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று பாஜக மாநில அண்ணாமலை கூறியிருக்கிறார்.
திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். இவர் கீரனூர் அருகே ஆடு திருடும் கும்பல் ஒன்றினை பிடிக்க விரட்டிச் சென்றார். அப்போது, ஆத்திரமடைந்த அக்கும்பல் சிறப்பு ஆய்வாளரை வெட்டி படுகொலை செய்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து கண்டம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், ''நவல்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கயவர்களால் நேற்று இரவு வெட்டிக் கொல்லப்பட்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலைமையில் தான், காவல்துறை சகோதர சகோதரிகள் பணியாற்று வருகிறார்கள்.
பணி நேரத்தில் கொலை செய்ப்பட்டவர்களுக்கு சிறப்பு சட்டம் எதுவும் கிடையாது. இது போன்ற நிகழ்வுகள் அந்த சிறப்பு சட்டம் வேகமாக கொண்டு வர வேண்டும். மாநில அரசு கூட இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணத் தொகையை அறிவித்து அதை செயல்படுத்த வேண்டும். இவரது குடும்பத்தை இழந்து வாடும் உறவினர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.